Monday, March 6, 2017

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...








தந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அருகில் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்து அதன் அழகில் வண்ணத்தில் பூரித்தேன்.மணமேடையின் வலதுப்பக்கத்தில் இருந்த மஞ்சள் பூசப்பட்ட மண்பானை அடுக்குகள் பார்த்து, சரேலென நினைவு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் போனது.தமிழ்க்குலம் தழைத்து நடந்து வந்த பண்பாட்டுப் பாதையை நினைவுகளில் ஓட்டி கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தேன்.

திருமண நாளன்று ( 2017 மார்ச் 02 ) காலை எட்டரை மணி நெருங்க உற்றாரும் சுற்றமும் வரத் தொடங்கி இருந்தார்கள்.மணமக்களின் பெற்றோர் இவர் இவர் எனக் காட்ட கவிஞர் ச.விசயலட்சுமி-சு.பழனிக்குமார் / அனந்தநாயகி-மனோகரன் கழுத்தில் அழகிய மாலைகள் சூட்டி அருகருகில் நின்று கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோபிநாத் அழகிய பட்டு வேட்டிக் கட்டி தோளில் துண்டு அணிந்து கொண்டு மணமேடை வந்து அமர்ந்தார். அன்பின் தேவதை சு.ப .நிவேதிதா கட்டம் போட்ட கூரைப்புடவைக் கட்டி மேடைக்கு வந்தார். மணமக்களைச் சுற்றி வித விதங்களில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொண்ட பெண்கள் மகிழ்ந்தும் பேசிக் கொண்டும் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரங்கினுள் இருந்து ரசிக்கத் தக்க அளவில் நாயனம் தவிலின் லயத்தோடு கூடிய இசையை தூவிக் கொண்டிருந்தன. மங்கலநாண் வைக்கப்பட்ட பூக்கள் தேங்காய் வாழ்த்தரிசித் தட்டு வாழ்த்துப் பெற சுற்றுக்குத் தரப்பட்டன.அவரவர்கள் வாழ்த்த வாழ்த்தரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு மங்கல்நாண் தட்டை வாழ்த்தி மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். தட்டு மண மேடைக்கு வந்தது. நாயனத்திலிருந்து "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி " என்று அமரத்துவம் கொண்ட கவியரசு கண்ணதாசனின் பாடல் உதிர்ந்து கொண்டு வந்தன.

கண்களில் ததும்பி நின்று, தொண்டையில் இறங்கிய கண்ணீர் , தொடர்ந்து சுரந்து மகிழ்வின் அதிர்வைத் தந்து கொண்டிருந்தது. மேடையில் நின்ற பார்த்திபனின் அம்மா நாயனத்தை நோக்கி தன் கையசைப்பில் கெட்டி மேளத்திற்கான சமிக்ஞை தந்து கொண்டிருந்தார். கெட்டிமேளம் ஒலிக்க அன்பின் தேவதை சு.ப.நிவேதிதா கழுத்தில் காலை 10.35 மணிக்கு மங்கலநாணைக் கட்டிக் கொண்டிருந்தார் கோபிநாத் . 

மனதில் வந்து நின்றது ஆண்டாளின்
இந்தப் பாடல்:
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

No comments:

Post a Comment