உலகநாயகன் என்ற பட்டத்தோடு மட்டும் இருந்தவரை மெய்யான உலகநாயகனாக்கியப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை சாரும். விஸ்வரூபத்திற்கான தடை நீட்டிப்பு ஒட்டி கமல்ஹாசன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் தன்மை,செய்திகள் மனசாட்சி உள்ளோரை உலுக்கி விட்டது.
இந்தியா முழுவதும் செய்தி தீயாக பரவி விட்டது. இனி கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை ஆண்டவன் மட்டுமில்லை என உணர்த்தி விட்டன ஊடகம்.
தமிழ்த் திரைஉலகு சார்ந்த பல கலைஞர்கள் குறிப்பாக பாரதிராஜா,மனிரத்தினம்,ரஜினிகாந்த்,விஜயகாந்த்,சிம்பு,ராதிகா,குஷ்பு,பார்த்திபன்,செல்வமணி,கே.ஆர்,பிரபு,சிவகுமார்,வைரமுத்து,அரவிந்தசாமி,எஸ்.ஏ.ராஜ்கண்ணு போன்றோர் நெருக்கடியான இந்த கட்டத்தில் கமலஹாசனோடு நிற்கிறார்கள்;வாழ்த்துகள்.
இந்தப் படத்தை தமிழக அரசு அணுகிய முறையை கடுமையாகச் சாடி இருக்கிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
பரமக்குடி கலவரம்,தர்மபுரி கொடூரம் என அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த அதிமுக்கிய நிகழ்வுகளில் ஊடகத்தை சந்திக்காத ஜெயலலிதா,விஸ்வரூபம் பிரச்சினையில் இன்று மதியம்(ஜனவரி 31) ஊடகத்தை சந்தித்திருக்கிறார்.
ஆறு நாட்களாக பேசப்பட்டும் எழுப்பப்பட்டும் வருகின்ற இப்பிரச்சினை சார்ந்த பல கேள்விகள்,விமர்சனங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்திருக்கிறார்.கூடவே கமலஹாசன் பற்றி அவர் வைத்திருந்த கருத்துகள் அவர் கொண்ட கோபத்தால் வெளியேயும் வந்துவிட்டன
கமல்ஹாசன் இந்தப் பிரச்சினையை ஏன் கோட்டிற்கு கொண்டு சென்றார்?அவர் ஏன் என்னிடம் முறையிடவில்லை?அவர் சொத்தை இழப்பதற்கு என் அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?வேட்டி கட்டிய தமிழன்தான் அடுத்த இந்திய பிரதமர் என்று இவர் சொல்வதற்கு இவர் என்ன கிங்மேக்கரா?
என்று ஜெயலலிதா தொடுத்த பல எதிர் கேள்விகளால் தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டார். இதுவரை ஊடகங்களும் பொதுமக்களும் விஸ்வரூப சிக்கல் குறித்து முன் வைத்த விமர்சனங்கள்,கருத்துகள் சரி என்று இன்று ஜெயலலிதாவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எவர் ஒருவரும் தன்னை நாடி நிற்காமல் போனால் இந்தக் கதிதான் என்று ஏனைய திரைக்கலைஞர்களை விஸ்வரூப தடை வழி மிரட்டியிருக்கிறார் ஜெயலலிதா. இவர் என்ன கிங்மேக்கரா என்று கேட்பதன் வழியாகவும் ஒவ்வோர் குடிமக்களுக்குமான கருத்து வெளியிடும் உரிமையை மறுத்து தனது காழ்ப்பை மெய்ப்பித்திருக்கிறார் தமிழக முதல்வர்.
கூடவே இந்த பேட்டியில் ஜெயலலிதா உண்மைக்கு மாறானவைகளை சொல்லி இருக்கிறார்.ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூப படத்தின் செயற்கை கோள் ஒளிபரப்புரிமை கிடைக்காததாலேயே இந்த சிக்கல் என்ற கருத்திற்கு ஜெயலலிதா பதில் சொல்கையில், ஜெயா தொலைக்காட்சியில் தான் எந்த பங்குதாரரோ, பொறுப்போ வகிக்கவில்லை என்றும் இந்த தொலைக்காட்சி அதிமுக வை ஆதரிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டார்.
நாளாக நாளாக விஸ்வரூபம் திரைப்படம் குறித்த சர்சைகளும் சந்தேகங்களும் நீடித்துக் கொண்டிருக்கின்றன.புரியாத புதிர்கள் புரிய தொடங்கி இருக்கின்றன.அடுத்தடுத்து கூடுதல் தகவல்களோடு இந்த பத்தி தொடரும்.
.