Tuesday, October 16, 2012

சென்னை சென்னை அழகிய சென்னை?




கிராமப்புறங்களில் நடைபாதை இருப்பதில்லை.அதற்கான  அவசியமும்  கட்டமைப்பும் இல்லாததால் இருப்பதில்லை.தொழில்மயமாகிற  ஊர் கட்டமைப்பை தாங்கி நகரமாக விரிகிற போது எந்திர வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிகளுக்கும் பழுது இல்லாமல் சாலை ஓரமாக அமையப் பெற்ற நடைபாதை எளிய குடிமக்களின் அடையாளமாகத் தெரிகிறது.ஆள்வோர்களின் முகம் எதிரொளிக்கும் இடமாகவும் இருக்கிறது.

வெளியூர்காரர்களின்  கனவு நகரமான சென்னை,நெருங்கிப் பார்க்கையில் அதன் வசிகரம் வடிந்து தகிக்கும் சென்னையாக காட்சி தருகிறது.பல்லாங்குழி ஊராக தோற்றம் காட்டுகிறது.தாம்பரத்திலிருந்து சென்னக்குள் வர நான்கு  சாலைகள் இருக்கின்றன.கடற்கறை ஓரமாக ஒன்று;.அண்ணாசாலை வழியாக இன்னொன்று; கோயம்பேடு நூறடிச்சாலை வழியாக மற்றொன்று;மதுரவாயல் எண்பதடிச்சாலை வழியாக பிறிதொன்று என முக்கால் மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாம்பரத்திலிருந்து சென்னைக்குள் வந்து விடலாம்.

சென்னை நகருக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொறு இடத்திற்கு ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒன்று முதல் ஒன்றேகால் மணிநேரம் வரை ஆகிவிடுகிறது.அத்தனை போக்குவரத்து நெரிசல்.என்னேரமும் நெரிசல் நெரிசல் தான்.இந்த நெரிசலிற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.ஒன்று அலுவலகங்கள் சென்னையில் குவிந்திருப்பது,அடுத்தது  வாகனஙகளின் பெருக்கம்;பிறகு சாலை ஒழுங்கின்மை

அலுவலகங்களை சென்னைக்கு வெளியே மண்டல அலுவலகங்களாகவோ அல்லது துணை அலுவலகங்களாகவோ மாற்றி அமைப்பதன் வழி சென்னையில் குவியும் வெளி மாவட்ட மக்களின் நேரத்தையும்,அலைச்சலையும் மிச்சப்படுத்துவதோடு ,நகருக்குள் நெரிசலை குறைக்க இயலும்.பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகர் பயணத்திற்கான பேருந்துகள் இல்லாத இடத்தை ஆட்டோக்களும்,பங்கு ஆட்டோக்களும் கூட நிறைவேற்ற இயலாத பின்னணியில்,வங்கிகள் ,அலுவலகங்கள் தரும் கடனால் பெருகி வரும் இரு சக்கர வாகனங்களினாலும் மகிழுந்துகளாலும் பெருகும் நெரிசல் ஒரு பக்கமிருக்க,சுயநிதி கல்லூரிகளின் பேருந்துகள்,பொதுப்பள்ளி,அருகமைப்பள்ளி குறித்த புரிதல் அரசிற்கு இல்லாததினால் நகரெங்கும் ஓடும் சுயநிதிப் பள்ளி,கல்லூரி பேருந்துகளினால் மாநகர நெரிசல் பன்மடங்காகி விட்டது.இவைகளினால் மட்டும் 45% நெரிசல் ஏற்படுகிறது.

பள்ளிநேரம்,அலுவலக நேரத்தைக்  கணக்கில் கொண்டு அரசு போதுமான பேருந்துகளை இயக்குவதும்,அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் நகரின் பல பகுதிகளுக்குச் செல்வதற்குரிய பேருந்து வசதிகள் அல்லது அருகமை நிலையம் சென்று மாறிச் செல்லும் வசதிகள் செய்தால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களின் வழியான நெரிசலை குறைக்க இயலும்.

1200 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலையில்,மாநகரத்திற்குட்பட்ட சாலையின் நீளம் 700 கிலோ மீட்டர்.இதில் பெரும்பகுதி சாலைகள் பல்லாங்குழி சாலைகளாகவும் பள்ளதாக்குகளாகவும் இருக்கின்றன.சாலைகளை சீரமைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை.இது மாநில அரசின் கீழ் வருகின்றது.ஏதேனும் ஒரு பள்ளத்தில் அல்லது திருப்பத்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனம் பழுதுப் பட்டு நின்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

பிரதான சாலைகளோ இணைப்புச்  சாலைகளோ உட்பக்கச் சாலைகளோ  எதுவாயினும் ஒரு மழை  முடிந்த காலத்தில் போடப்படும் சாலைகள் அடுத்த மழை காலத்தில் காணாமல் போகாது இருக்க உறுதியான சாலைகள் அமைக்க வேண்டும்.தார்ச் சாலைகளோ,நெகிழியினால் உருவாக்கப்படும் சாலைகளோ பெருகி வளர்ந்து வரும் மாநகரின் தேவைகேற்ற முறையில் ஒப்பந்தக்காரர்கள் ,ஆளும் கட்சிக்காரர்கள் கையூட்டு தலையீடு இன்றி ,வெள்ளத்தில் அரித்துப் போகாத தரமான சாலைகள் காலத்தில் அமைதல் வேண்டும்.

மின்சார வாரியம்,குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம்,மாநகர தொலைபேசி துறை இவர்களுக்குள்  செயற்பாட்டு ஒருமித்தல் இல்லாததால் அவ்வப்போது அவரவர் தேவைக்கேற்ப சாலைகளை உடைத்து குண்டும் குழியுமாக்கி நிரவப் படாமல் திறந்து கிடக்கும் சாலைகள் தெருக்கள் குழந்தைகளை காவு வாங்கி விடுகின்றன.

சென்னை அழகிய சென்னை
இது வங்கக் கடலின் திண்ணை
தமிழக மண்ணின் தலை நகரம்
கடல் தாலாட்டுப் பாடும் அலை நகரம்

என்று கவிஞர் வைரமுத்து  எழுதிய வரிகள் மெய்ப்பட வேண்டுமெனில் இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதோடு,மாநகராட்சிகளுக்கு மாநில அரசை அண்டி வாழும் நிலைமையை மாற்ற போதுமான அதிகாரத்தை வழங்கி,எளிய மக்கள் பார்வையிலான திட்டமிடலும் தேவை என்பதை நாம் சொல்லி முடிக்கிறோம்

No comments:

Post a Comment