Friday, January 6, 2012

திறந்த கதவு



கி.ராஜநாராயணன்
சந்திப்பு:இரா.தெ.முத்து

நான் முப்பது  வயசுக்கு பிறகுதான் எழுத ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு தொண்ணூறு வயசு.ஏன் எழுத ஆரம்பிச்சேன்;எதனால எழுத ஆரம்பிச்சேன் அதெல்லாம் இப்ப சொல்ல வேண்டியது இல்ல.முதல் கத பிரசுரமானதை யோசிக்கிற போது அப்போ கையெழுத்துப் பத்திரிகைக்கு கொடுத்தத சொல்லவா?சக்தி இதழுக்கு என் நண்பன் கு.அழகிரிசாமி ஒரு கத கேட்டு கொடுத்ததச் சொல்லவா?இல்ல விஜயபாஸ்கரனின் சரஸ்வதி இதழுக்கு அனுப்பி வச்சக் கதையச் சொல்லவா?ஆனாலும் முதல்ல பிரசுரமானது மாயமான் கதைதான்.இது 1958ஆம் வருசம் நவம்பர் மாசம் சரஸ்வதியில் வெளிவந்தது.. 

முதல் தொகுப்பாக  வந்தது கதவு தான்.இது சிறுகதைத்  தொகுப்பு.1965 ஆம் வருசம் வெளிவந்தது.இந்த கதைங்க பூராவும் மாயமானைத் தவிர தாமரையில் வந்தது .மாயமான் கதைய தோழர் ஜீவா அவர்கள் படித்து விட்டு எனக்கு ஒரு கடிதம் போட்டார்.அதில கதை நன்றாக இருப்பதாகவும் தாமரை இரண்டாவது இதழை பொங்கல் மலராக கொண்டு வர இருப்பதாகவும் அதற்கு ஒரு கதை வேண்டும் என்றும் கேட்டிருந்தார்..  

தாமரை இதழுக்கு அனுப்பி வச்சக் கதைதான்  கதவு.அப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள்,செய்திகள் வேறு இதழ்களில் வெளிவருவது சிரமம்.ஒண்ணு ரெண்டு கதைகளைக் கூட போட்டு விடுவார்கள்..ஆனா தொகுப்பாக பதிப்பகங்கள் கொண்டுவர மாட்டார்கள்..இப்படியான காலத்தில்தான் என் கதைகள் தாமரையில் வெளிவந்தன. 

வெளிபதிப்பகங்களின்  இந்தத் தன்மை காரணமாகவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் நியூ செஞ்சுரி புக் அவுஸ்.என் கதைகளை தொகுத்து புஸ்தகமாக கொண்டு வரலாம் என்று என்.சி.பி.ஹெச் நிறுவனம் விருப்பம் தெரிவிச்சது.அதன் படியே  என்.சி.பி.ஹெச் வெளியீடாக கதவு புஸ்தகம் வந்தது.இதோடு சேர்ந்து நான் தொகுத்த தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் என்கிற தொகுப்பும் வந்தது.தொகுப்பாக கொண்டு வருவதற்கு எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.காரணம் என்.சி.பி.ஹெச்சும் சக தோழர்களும்.நான் எழுத ஆரம்பித்த மூன்று ஆண்டுகளிலேயே இந்த கதவு தொகுப்பு வெளிவந்தது. 

அப்போது நான் அறியப்படாத ஆள்.என் கதவு கதை தாமரையில் வெளிவந்தது அல்லவா?அதற்கு சன்மானமா பத்து ரூபாயை அனுப்பி இருந்தார்கள்.ரொம்ப சந்தோசம் எனக்கு.சிறு பத்திரிகைகளில் அப்போது சன்மானமெல்லாம் அனுப்பும் வழக்கமிருந்தது இல்ல.தாமரை அனுப்பிய அந்த பத்து ரூபாய் பெரிய விசயம்.அதற்கு பிறகு அவர்கள் சன்மானம் அனுப்பினது இல்லை.மொதல்ல புது மாடு குளிப்பாட்டினது கணக்கா அனுப்பினாங்க.அப்போது எவர்சில்வர் வந்திருந்த காலம்.அந்த பத்து ரூபாயை செலவழிக்க மனமில்லை.அதுக்கு அழகான ஒரு எவர்சில்வர் வெற்றிலைச் செல்லம் வாங்கினேன்.எனக்கு அப்போ வெத்திலை போடும் பழக்கம் இருந்தது.அதை இன்னும் ஞாபகமா வச்சிருக்கேன். 

கதவு தொகுப்பிற்கு முன்னுரை அணிந்துரை எல்லாம் கிடையாது.பதிப்பாளர் குறிப்பு மட்டும் இருக்கும்.ஏன் முன்னுரை இல்லை என்று கேட்டால் எழுத்தாளன் தான் சொல்ல வேண்டியதை எல்லாம் கதையில படைப்புல சொல்லி விடுகிறான்.இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?இன்னொரு காரணம் இருக்கு. இந்த விமர்சனம் ,மதிப்புரை பண்ணுரவங்க இருக்காங்களே அவங்க பெரும்பாலும் கதையை படிக்க மாட்டாங்க.அவங்களுக்கு வேலை கொடுக்கனுமின்னா பழத்தை உறிக்காம முழுசா கொடுக்கனும். 
கதவு புஸ்தகமாக  வந்தது நண்பர்களுக்கு தோழர்களுக்கு சந்தோசம்.எனக்கு வெளியீட்டு விழாக்களில் ஆர்வம் கிடையாது.மண்டபம் பிடிச்சு மைக் போட்டு செலவு செய்யுறது தேவை இல்லை.ஆனாலும் நண்பர்கள் விழா மாதிரி செய்ய வேண்டாம் என்று சொல்லி ஒரு வாசகர் வீட்டில எளிய முறையில் செய்யலாம் என்று தீபம் நா பார்த்தசாரதியின் மைத்துணர் தீபம் நடராசன் மூலம் என்னை சம்மதிக்க வைத்து விட்டனர். 

  காசு கொடுத்து புத்தகம் வாங்கி சேகரிக்கும் ஆர்வம் கொண்டத.பி.செல்லம் ராஜபாளையத்தில் கட்டின புது வீட்டில் அவர் தலைமையில் மதுரைப் பேராசிரியர் பேரு மறந்து போச்சு அவர் வெளியிட ஒரு வாசகர் புஸ்தகத்தப் பெற ஒரு பதினைந்து பேரு வந்த கூட்டத்தில் கலந்துரையாடல்,பேச்சு என போனது.செல்லம் இப்போது இல்லை.காலமாயிட்டாரு.அவரைப் பற்றி புத்தகக் காதலர் என்று ஒரு கட்டுரை ஒன்னும் எழுதி இருக்கேன்.  

கதவு புஸ்தகம் வெளிவந்ததுக்கு பிறகு சிறந்த புஸ்தகம் என்று தமிழக அரசு பரிசளித்துப் பாராட்டியது.1971 ஆம் வருசம் இந்தப் பரிசை முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.கதவை யோசிக்கிற பொழுது இதெல்லாம் மனசுக்கு வந்து இனிமை தருகிறது. 

                   (2012 சனவரி புத்தகம் பேசுது இதழில் வெளிவந்தது)

No comments:

Post a Comment